இந்தக் கூட்டணியே பலமாக உள்ளது!: கே.பி.கிருஷ்ணமூர்த்தி
சென்னை: கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணியே பலமாக உள்ளது. இதில் சேர்ப்பது, நீக்குவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என மேலிடப் பிரதிநிதி கே.பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்
தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, சேவா தளம் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி இன்று சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்களின் அடுத்த குறிக்கோள். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கவுன்டவுண் ஆரம்பித்துவிட்டது. அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி துணை அமைப்புகளைப் பலப்படுத்த வந்துள்ளேன்.
இந்த துணை அமைப்புகள் மத்திய அரசின் சாதனைகளை, குறிப்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்வார்கள்.
2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணியே பலமாக உள்ளது. இதில் சேர்ப்பது, நீக்குவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.