ஈழக்தமிழர் படுகொலை: 19ம் தேதி திரையுலகினர் கண்டனப் பேரணி!
இந்தப் போராட்டத்துக்காக அனைத்து தமிழ் படப்பிடிப்புகளும் இம்மாதம் 18, 19, மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நிறுத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது குறித்து தமிழ் திரையுலகினர் நேற்று பிலிம்சேம்பரில் கூடி ஆலோசித்தனர். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளைத் தெரிவித்தனர்.
தீர்மானங்கள்:
கூட்டத்துக்குப் பின், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், இயக்குநர் பாரதிராஜா, பிலிம்சேம்பர் தலைவர் கேஆர்ஜி ஆகியோர் நிருபர்களைச் சந்தித்தனர்.
முதலில் இக் கூட்டத்தில நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இயக்குநர் பாரதிராஜா படித்தார்.
தமிழ் ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலையைக் கண்டித்தும், சிங்கள ராணுவத்தின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரியும் பல்வேறு சமூக அமைப்புகள் ஒரு சேர நின்று குரல் கொடுத்து வருகின்றன. அவர்களுடன் கலையுலகமும் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன், சிங்கள ராணுவத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
சிங்கள ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில், திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் ஆகிய அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைந்து, உரத்த குரலில் எங்களின் கண்டனத்தை தெரிவிக்க முடிவு செய்து இருக்கிறோம்.
தாக்குதலை நிறுத்துங்கள்!
முதல் கட்டமாக தமிழர் பகுதியில் குண்டு வீச்சு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் அறிவித்து அமைதி திரும்ப உதவ வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகளை மத்திய அரசு நேரடியாக வழங்க வேண்டும்.
ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ராணுவ உதவிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
தமிழக மீனவர்கள் கடல் எல்லைப் பகுதியில் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியா-இலங்கை கூட்டு ரோந்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.
முறையாக ஒரு தூதுக்குழு அமைத்து, இலங்கையில் நடக்கும் நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டு மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
இலங்கை அரசுக்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில், தமிழ் திரையுலகில் எல்லா வேலைகளும் நிறுத்தப்படும். படப்பிடிப்பு உள்பட திரைப்பட தயாரிப்பு தொடர்பான எந்த வேலைகளும் நடைபெறாது.
ராமேஸ்வரத்தில்...
தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து பிரிவினரும் வருகிற 18ம் தேதி சென்னையில் இருந்து தனி ரயிலிலும், பஸ்களிலும் புறப்பட்டு ராமேசுவரம் செல்கிறோம். 19ம் தேதி, ராமேசுவரத்தில் கண்டன ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடைபெறும்.
ராமேசுவரம் கடலோரத்தில் நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில், திரையுலகம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்கும். அந்த குரல், இலங்கைக்கு எட்ட வேண்டும். மத்திய அரசுக்கும் எட்ட வேண்டும், என்றார் பாரதிராஜா.
கறுப்புக் பேட்ஜ்:
திரையுலகை சேர்ந்தவர்கள் சிங்கள ராணுவத்துக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், நேற்று முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்து வருகிறார்கள்.