தத்தளிக்கும் வங்கிகளுக்கு மேலும் ரூ.25,000 கோடி!
வங்கிகளின் ரொக்கப் புழக்கம் மற்றும் இருப்புத் தன்மையை மேம்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய ரிசர்வ் வங்கி மூன்று கட்டுப்பாடுகளை வணிக வங்கிகள் மீது விதித்தது. அதில் முக்கியமானது சிஆர்ஆர் எனப்படும் ரொக்க இருப்பு விகிதம். அதை சமீபத்தில்தான் 1.5 சதவிகிதம் வரை குறைத்து பணப் புழக்கத்தை அதிகரித்தது.
அடுத்து, வணிக வங்கிகளுக்கு தான் வழங்கும் குறுகிய கால கடன்களின் மீது கடுமையான வட்டியை விதித்தது ரிசர்வ் வங்கி. இதனை வங்கி வட்டி விகிதம் அதாவது ரெபோ ரேட் என்கிறார்கள். இதையும் தற்போது 2 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.
அடுத்து, அரசுத் திட்டங்களுக்காக நிதி திரட்ட வெளியிடப்படும் பத்திரங்களில் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்தாக வேண்டும் அனைத்து வங்கிகளும் (எஸ்எல்ஆர்). இந்த முதலீட்டு அளவையும் 2 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் மட்டுமே ரூ.70 ஆயிரம் கோடி கூடுதல் பணப் புழக்கம் ஏற்படும்.
இத்துடன் நில்லாமல், வணிக வங்கிகள் தள்ளுபடி செய்த விவசாயக் கடன்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.25 ஆயிரம் கோடியை உடனடியாக ரிலீஸ் செய்யவும் ரிசர்வ் வங்கிக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
இந்த தளர்வுகள் எந்த அளவு ரொக்கப் புழக்கத்தை அதிகரித்து, வங்கிகளின் செயல்பாட்டை நிதானத்துக்குள் கொண்டு வரப் போகின்றன என்பது போகப் போகத்தான் தெரியும்.