வழிப்பறி திருடர்களை மடக்கிய மாணவி!
சென்னை: சென்னை அருகே செயினை பறிக்க வந்த திருடர்கள் இருவரை கல்லூரி மாணவி பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார்.
சென்னை அடுத்த தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி மாணவி புஷ்பா (21). தாம்பரம் பகுதியைச் சேர்ந்த இவர், நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த புஷ்பாவிடம் இருந்து பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் தங்க செயினை பறிக்க முயன்றனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட புஷ்பா, அவர்களின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டார். இதனால் அவர்களால் பைக்கை ஓட்ட முடியாமல் தடுமாறி கீழே விழுந்தனர்.
அடுத்த நொடியே தனது துப்பட்டாவால் வாலிபர்கள் இருவரின் கைகளையும் புஷ்பா கட்டினார். அவர்களை துப்பட்டாவில் இழுத்து பிடித்தபடி உதவி கேட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் திருட்டு வாலிபர்கள் இருவரையும் பிடித்து உதைத்தனர்.
பின்னர் அவர்கள் உதவியோடு இருவரையும் போலீஸில் ஒப்படைத்தார் புஷ்பா.
விசாரணையில் அவர்கள் பெயர் பார்த்தசாரதி (21), வெங்கடேசன் (27) எனத் தெரியவந்தது. இரண்டு முறை வழிப்பறி குற்றங்களை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.