இந்துக்களுக்கு கருணாநிதி துரோகம்-இ.முன்னணி
சென்னை: கிருஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்த கருணாநிதி தொடர்ந்து இந்து சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து வருகிறார் என்று இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தனர். கடந்த ஆண்டு திமுக அரசு அரசியல் சாசனத்திற்கு விரோதமாக கிருஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து தலா 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்தது.
பிற்பட்ட வகுப்பினரில் உள்ள கிருஸ்தவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலத்தை பயன்படுத்தி 148 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சேர வேண்டிய வேலைவாய்ப்புகளை தட்டிப் பறித்து அனுபவித்து வந்தனர்.
தற்போது தனி இடஒதுக்கீடு செய்தவுடன் மற்ற சமுதாயத்தினரின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், கிருஸ்தவர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று கருணாநிதி கிருஸ்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளார்.
கருணாநிதி தொடர்ந்து இந்து சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து வருகிறார். கிருஸ்தவர்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்த கருணாநிதி, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டையும் ரத்து செய்யாதது ஏன்?
இடஒதுக்கீடு பிரச்சனையில் அரசியல்வாதிகள் மைனாரிட்டி ஓட்டுக்காக இந்து சமுதாயத்தை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் இதனை சரியாக புரிந்து கொண்டு அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். என்று கூறியுள்ளார்.