தொடரும் மனிதநேயம்: விபத்தில் இறந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை: சாலை விபத்தில் மூளை செயலிழந்ததால் மரணமடைந்த இறந்த இளம் இன்ஜினீயர் கணேசன் என்பவரது உடல் உறுப்புகளும் சென்னையில் தானம் செய்யப்பட்டன.
வேலூர் கோவிந்தராஜபுரம், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த தம்பதி நந்தகுமார்- சித்ரா. இவர்களது மகள் காமாட்சி, மகன் கணேஷ் (24). காமாட்சி சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணேஷ் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க முடித்துவிட்டு வேலூரில் பணியாற்றினார். பின்னர் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள கம்பெனியில் வேலை கிடைத்து. இதையடுத்து கடந்த வாரம் திங்கள்கிழமை வேலையில் சேர்ந்தார். கடந்த சனிக்கிழமையன்று வேலையை முடித்துவிட்டு பைக்கிள் வீட்டுக்கு கிளம்பினார்.
அப்போது அந்த வழியே வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேஷூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போய்விட்டது. கணேசின் மூளை செயலிழந்துவிட்டது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
மகன் இறக்கும் நிலையில் இருக்கிறான் என்பதை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். கதறித்துடித்த பெற்றோர் பின்னர் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் அதற்கான வேலைகளை தொடங்கினர். கணேஷ் உடலில் இருந்து இருதயம், கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டு தானமாக கொடுக்கப்பட்டன.
இது குறித்து கணேஷின் தாய்மாமா ஜானகிராமன் கூறியதாவது:
கணேஷ் மிகவும் நன்றாக படிப்பான். இன்ஜினீயரிங் டிசைனில் முதல் ஆளாக வர வேண்டும் என்று விரும்பினான். அதன்படி பி.இ.மெக்கானிக்கல் படித்து முடித்து இன்ஜினீயரிங் டிசைனில் முழு கவனம் செலுத்தி வந்தான். குடும்ப பொறுப்பை இனி கணேஷ் ஏற்றுக் கொள்வான் என்று நம்பியிருந்தோம். அதற்குள் அவனை நாங்கள் இழப்போம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவனது உடல் உறுப்புகள் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை தானமாகக் கொடுத்துள்ளோம் என்றார்.
உறுப்பு தானம் அதிகரிப்பு
சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்குள் உடல் உறுப்புகளை தானம் செய்யும் 3 சம்பவங்கள் நடந்துள்ளன. மக்களிடம் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருப்பதை இது காட்டுகிறது.
சாலை விபத்தில் மூளை சாவு ஏற்பட்ட ஹிதேந்திரனைத் தொடர்ந்து பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
பிரபல கார்ட்டூனிஸ்டு மதனின் தம்பி முரளியும் மூளை செயலிழந்து இறந்தார். அவரது உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டன.
தற்போது இளம் இன்ஜினீயர் கணேஷின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன.