சிஆர்ஆர் குறைப்பு: ரூ.40000 கோடி ரொக்கம் விடுவிப்பு!
மும்பை: வங்கிகளின் ரொக்க இருப்புத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆரை மேலும் 1 சதவிகிதம் குறைத்துள்ளது.
இதன் மூலம் வங்கிகளில் மேலும் ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் கையாளப்படும்.
சிஆர்ஆர் குறைக்கப்படுவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது மூன்றாவது முறையாகும்.
ஏற்கெனவே 1.5 சதவிகிதம் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது குறைக்கப்பட்ட 1 சதவிகிதத்தையும் சேர்த்தால் மொத்தம் 2.5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக ரூ.1 லட்சம் கோடி ரொக்கப் புழக்கம் அதிகரிக்கும்.
இன்றைய நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் சிஆர்ஆர் விகிதம் வெறும் 6.5 சதவிகிதம் மட்டுமே.
மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்டுகளுக்கு 50 புள்ளிகள் அடிப்படையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மேலும் அதிக டெபாசிட்டுகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.