இளைஞரணி மாநாடு அரசியல் மாற்றத்தை ஏற்படு்ததும்: சுதீஷ்
வேலூர்: வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தேமுதிக இளைஞரணி மாநாடு தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரும் விஜய்காந்தின் மச்சானுமான எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
வேலூர் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் அரக்கோணத்தில் மாணவ, மாணவியர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது. மையத்தை எல்.கே.சுதீஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் கருதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவின் பேரில் 60 இடங்களில் ரூ.1.5 கோடி செலவில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
ஒரு மணி நேரத்தில் 10 மாணவ, மாணவியர் வீதம் தினமும் 100 மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாநில முழுவதும் 6 ஆயிரம் பேருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி தரப்படுகிறது.
மக்களை ஏமாற்ற ஆட்சியாளர்கள் இலவச கலர் டி.வி. கொடுப்பது போல நாங்கள் இந்த கணினி பயிற்சி மையங்களை திறக்க வில்லை. மாணவ, மாணவியரின் வருங்காலத்தை கருதியே இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்படுகின்றன.
தவிர, இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தர தேமுதிக சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி தகுதி அடிப்படையில் வேலை பெற்றுத் தருகிறோம். சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு ஆட்டோ வாங்குவதற்காக கடனுதவி அளிக்கப்படுகிறது.
வருகிற 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தேமுதிக இளைஞரணி மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.