ஊழியர்களை ஊதியம் இல்லா விடுப்பில் அனுப்பும் ஏர் இந்தியா!
இது குறித்து ஏர் இந்தியா தலைவரும் நிர்வாக இயக்குனருமான ரகு மேனன் கூறுகையில்,
விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் பயணிகள் குறைந்து போனதாலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களாலும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை.
இதனால் 15,000 ஊழியர்களை 3 முதல் 5 ஆண்டுகள் வரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் அவர்களுக்கு ஊதியம் தரப்படாது.
இந்த திட்டத்தை ஏற்பவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால், அப்போது பழைய சீனியாரிட்டி மற்றும் கடைசியாக வாங்கிய ஊதியம் தான் தரப்படும் என்றார்.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் ஏர் இந்தியா ஊழியர்களிடையே பெரும் பீதியும் பரபரப்பும் பரவியது. இதையடுத்து அதன் செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர பார்கவா நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,
ஊதியமல்லாத விடுப்பு ஊழியர்கள் மீது திணிக்கப்படாது. அவர்கள் விரும்பினால் இந்தத் திட்டத்தை ஏற்கலாம். யாரையும் கட்டாயப்படுத்தி போகச் சொல்ல மாட்டோம்.
விடுப்பு காலத்தில் அவர்கள் வேறு வேலைகளில் சேரலாம், தொழில் செய்யலாம். பின்னர் மீண்டும் பணியில் சேரலாம். இந்தத் திட்டம் பைலட்கள், பொறியாளர்கள், தரைக் கட்டுப்பாட்டு ஊழியர்கள் தவிர்த்து பிற பிரிவினருக்கு பொறுந்தும்.
15,000 பேரை கட்டாயப்படுத்தி விடுப்பில் அனுப்புவோம் என்று செய்திகள் வெளியானது தவறானது.
கடந்த 2003ம் ஆண்டில் ஏர் இந்தியா இதே போன்ற விடுப்பு திட்டத்தை நாங்கள் அறிவித்தோம். ஆனால், அதை ஏற்றது வெறும் 300 ஊழியர்கள் மட்டும் தான். இந்த முறை 500 ஊழியர்கள் இந்த திட்டத்தை ஏற்று விடுப்பில் போனால் கூட மகிழ்ச்சி தான் என்றார்.
1,900 பேரை நீக்கிய ஜெட்:
நேற்று முதல் கட்டமாக 1,000 ஊழியர்களை நீக்கிய ஜெட் ஏர்வேஸ் அடுத்து மேலும் 900 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
ராஜை சமாதானப்படுத்த முயற்சி:
இந்த வேலை நீக்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள மகாராஷ்டிர நவ நிர்மாண் அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவை சமாதானப்படுத்தும் வகையில் அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல்.
முடிந்தவரை ஊழியர்களை நீக்க மாட்டோம் என அப்போது அவரிடம் கோயல் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
கிங் பிஷ்ஷரிலும் பணி நீக்கம்:
ஜெட் ஏர்வேஸைத் தொடர்ந்து மல்லையாவின் கிங் பிஷ்ஷரும் பல்லாயிரம் ஊழியர்களை பணி நீ்க்கம் செய்யும் என்று கூறப்படுகிறது.