அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: இன்று காலை கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதே போல மக்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்சபாவில் மதக் கலவரம், தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக அமளி எழுந்ததால் நாள் முழுவதும் தொடர் ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவை கூடியதும், பாஜக உறுப்பினர்கள் ஸ்ரீகந்தப்பா, கிஷண்லால் திலேர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ராஜேந்திர அக்னிஹோத்ரி, ராம்சஜீவன், தேஜ் பிரதாப் சிங், பி.ஆர்.ராமகிருஷ்ணன், சிவசம்பதிராம், சுல்தான் சலாவுதீன் ஒவாய்சி ஆகியோரது மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து, டெல்லி, பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் இறந்தவர்கள், பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள், இமாச்சல பிரதேசம் நயனதேவி கோவில் மற்றும் ராஜஸ்தானில் சாமுண்டாதேவி கோவில்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மக்களவை நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்சபாவில் அமளி-ஒத்திவைப்பு:
அதே போல ராஜ்யசபாவிலும் குண்டு வெடிப்பு, வெள்ளம், கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மதக்கலவரங்களில் இறந்தவர்களுக்காகவும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு கூச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து பரிதாபமான சம்பவங்களில் இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் துக்கம் தெரிவிக்கப்படுகிறது என்று அன்சாரி குறிப்பு வாசித்தார்.
பின்னர், கர்நாடக மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில் நடந்த மதக் கலவரங்கள் குறித்து இடதுசாரி உறுப்பினர்கள் கடுமையாக விவாதித்தனர். இதற்கு பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டத்தை நன்பகல் 12 மணிவரை அன்சாரி ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் கூட்டம் கூடியபோது, உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து திங்கள்கிழமைக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.