மோசடி- போலி பெண் சாமியார் கைது
தஞ்சாவூர்: தஞ்சையில் ஓய்வு பெற்ற அதிகாரியின் மனைவிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த போலி பெண் சாமியார் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள மெலட்டூரைச் சேர்ந்தவர் பத்மனாபன் (64). இவர் நாகை வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் ஆர்டிஓவின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி பத்மாவதி (55). இவர்களது மகன்கள் மங்கள குமார், ராஜராஜன், கீர்த்தி வாசன். மூன்று பேருமே மன வளர்ச்சி குன்றியவர்கள்.
மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் நலம் பெற வில்லை. இதனால் பத்மாவதி கோயில்களுக்கு சென்று பிராத்தனை செய்து வழிபட்டார்.
இந்த நிலையில் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் சாமியாருடன் பத்மாவதிக்கு அறிமுகம் கிடைத்தது.
அப்போது, உன் குடும்பத்திற்கு செய்வினை உள்ளது. அதை தீர்த்தால் அந்த நோய் குணமாகிவிடும் என்று பெண் சாமியார் பத்மாவதியிடம் கூறினார்.
அதை நம்பிய பத்மாவதி அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பூஜைகள் நடத்தியுள்ளார். இதை சாக்காக வைத்து அவரிடம் இருந்து போலி பெண் சாமியார் மகேஸ்வரி பல லட்சம் ரூபாய் பறித்துள்ளார். மேலும் 25 பவுன் நகைகளையும் வாங்கியுள்ளார்.
மேலும் பூஜைகள் நடத்த பத்மாவதியிடம் ரூ.6 லட்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க வேண்டாம் என்று பத்மாவதியின் மகள் சியாமளாவின் கணவர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி, அவரின் அண்ணன் சங்கரை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இது பற்றி பத்மனாபன் தஞ்சை எஸ்பி சம்பத்குமாரிடம் நேரில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போலி பெண் சாமியார் மகேஸ்வரியை கைது செய்து அவரிடம் இருந்து சங்கரை மீட்டனர்.
மேலும் அவரிடம் இருந்த டாடா சுமோ கார், அம்பாசிடர் கார், 3 பவுன் நெக்லஸ், பல ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.