பங்கு வர்த்தக சரிவு: 28 புதிய நிறுவன பங்கு வெளியீடு நிறுத்தம்!
மும்பை: சர்வதேச நிதிச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் நெருக்கடி இந்திய பங்குச் சந்தையையும் 'ஒரு கை பார்த்து' வருகிறது.
மோசமான பொருளாதார சூழல் காரணமாக புதிய பங்குகளை வெளியிட, 'செபி'யின் அனுமதி பெற்றிருந்த 28 நிறுவனங்கள் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டன.
பங்குகளை வெளியிட 'செபி'யின் அனுமதி பெற்ற தேதியிலிருந்து 90 தினங்களுக்குள் நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டும்.
ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் (ரூ.6,000 கோடி), ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் (ரூ.4,000 கோடி), யூ.டி.ஐ. அசெட் மேனேஜ்மெண்ட் (ரூ.2,000 கோடி), அக்மி டெலிபவர் (ரூ.1,200 கோடி), மகிந்திரா ஹாலிடேஸ்&ரிசார்ட்ஸ் இந்தியா (ரூ.1,000 கோடி), எம்.சி.எக்ஸ் (ரூ.600 கோடி) ஆகிய முன்னணி நிறுவனங்கள் மொத்தம் ரூ.19,463.19 கோடி திரட்ட இம்மாதம் 17-ந் தேதிக்குள் பங்குகளை வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆனால் பங்கு வர்த்தகத்தின் மந்த நிலையால் இந்நிறுவனங்கள் பங்குகளை வெளியிட விரும்பவில்லை. இந்நிறுவனங்கள் கெடு தேதிக்குள் பங்குகளை வெளியிடாததால் அனுமதி காலாவதியாகி விட்டது!
இவற்றைத் தவிர, பங்கு வெளியிட மேலும் 14 நிறுவனங்கள் 'செபி'யின் அனுதியைப் பெற்றிருந்தன. இவற்றின் கெடு தேதி இன்னும் முடிவடையவில்லை. பங்குகளை இந்நிறுவனங்கள் வெளியிடுமா என்பதும் தெரியவில்லை.