கிளிநொச்சியில் புலிகள் ராணுவம் கடும் சண்டை
கொழும்பு: ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், போர் நிறுத்தம் செய்து சமாதானப் பேச்சுக்களைத் துவங்கவும் உலகமெங்கிலுமிருந்து இலங்கை அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனாலும் இலங்கை ராணுவம் தனது தாக்குதலைக் குறைத்துக் கொள்ளவில்லை.
கிளிநொச்சியில் நேற்று முதல் போரின் வேகத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன சிங்கள படைகள். அக்கராயன் குளம் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் புலிகள் ஏற்படுத்தியுள்ள மண் மேடு தடுப்பரண்களை ராணுவம் அகற்றத் தொடங்கியுள்ளது.
இன்னொரு பக்கம், அக்கராயன் குளத்திற்கு வடக்கே உள்ள புலிகளின் மறைவிடங்களையும் ராணுவம் தாக்கி வருவதாக ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கே பல்லவராயன் காடு பகுதியில் இருந்தும் வீரர்கள் புலிகளின் மறைவிடம் நோக்கி முன்னேறி வருகிறார்கள்.
இந்த இருமுனை தாக்குதல் காரணமாக நச்சிக்குடாவிலிருந்து தரைவழிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறிகின்றன.
ஆனால் ராணுவத்தின் தாக்குதல்களை புலிகள் கடுமையாக போரிட்டு முறியடித்து வருகின்றனர். குறிப்பாக புலிகளின் கண்ணிவெடிகளை அகற்ற முடியாமல் ராணுவம் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.
ராணுவத்தின் உக்கிர போர் காரணமாக கிளிநொச்சியை ஒட்டி வாழும் தமிழ் குடும்பங்கள் அனைத்தும் இடம் பெயரத் துவங்கியுள்ளன.