வங்கிகளில் முதலீடுகள் பத்திரமாக உள்ளன-பிரதமர்
பொருளாதார நிலை குறித்து மக்களவையில் இன்று அவராகவே ஒரு அறிக்கையை வாசித்தார். அவர் கூறியதாவது:
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள், நெருக்கடிகளின் விளைவுகளை இந்தியாவும் சந்தித்து வருவது உண்மை தான். ஆனால், இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் பலமானவை. அவை ஸ்திராமாகவே உள்ளன.
ஆனாலும் சர்வதேச அளவி்ல் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் இந்திய பொருளாதாரமும் தாற்காலிமாக மந்த நிலையை சந்திக்கலாம்.
2007-08ம் ஆண்டுகளின் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருந்தது. இது 7.5 சதவீதமாக குறையலாம். இதற்கு மேல் குறைய வாய்ப்பில்லை என்பது தான் பெரும்பாலான நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆனாலும் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்படும் சவால்களை, பிரச்சனைகளை சமாளிக்க மத்திய அரசு எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுக்கும்.
அமெரிக்க நிதிச் சிக்கலால் இந்திய வங்கிகளுக்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை. அமெரிக்காவில் கரைந்துபோன நிதியில் இந்திய வங்கிகளின் நிதி பெரிய அளவில் இல்லை.
இதனால் இந்திய பொதுத்துறை, தனியார் வங்கிகளின் நிதி நிலைமையில் எந்த பிரச்சநையும் இல்லை. அவை அனைத்துமே போதுமான நிதியுடன் போதுமான கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.
இதனால் இந்தியாவில் எந்த வங்கியும் திவாலாக வாய்ப்பே இல்லை. வங்கிகளில் உள்ள மக்களின் பணம் பத்திரமாக உள்ளது என்பதை நான் உறுதி செய்கிறேன்.
அதே நேரத்தில் சந்தையில் பணப் புழக்கம் குறைந்து போயுள்ளது உண்மை தான். இந்திய நிதி அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் கடன் குறைந்துவிட்டது. இதனால் தான் பணப் புழக்கம் குறைந்துள்ளது. மேலும் இதே காரணத்தால் தான் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை சரி செய்யத் தான் ரிசர்வ் வங்கி அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வங்கிகளில் பண இருப்பை அதிகரிக்கச் செய்து வருகிறது. இதற்காகத் தான் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் (crr), வங்கிகளுக்கான கடன் வட்டித் தொகை (repo rate) ஆகியவற்றை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
மேலும் வங்கிகள் தங்களுக்குள் வாங்கிக் கொள்ளும் அவசர நிதிக்கான (call money rate) வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர்.