திமுகவின் தியாக மனப்பான்மைம்-பாஜக கிண்டல்
திண்டுக்கல்: காலாவதியான பதவியை தியாகம் செய்யும் மனப்பான்மை திமுகவிற்கு மட்டுமே உண்டு என்று பாஜக முன்னாள் மாநி்லத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கிண்டலடித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். இதில் பாஜகவும் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும்.
தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது.
இலங்கையில் ஈழ தமிழர்களின் போராட்டம் பின்னடைவுக்கு விடுதலைப் புலிகளே காரணம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசிச போக்கு தான் இந்த அபாய நிலைக்கு காரணம்.
மேலும், அமிர்தலிங்கம், பிரமேதாசா, முகுந்தன், போன்றவர்களின் மரணத்திற்கு விடுதலைப் புலிகளே காரணம்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரை இந்திய அரசு உடனே மாற்ற வேண்டும். அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை மதித்து புரிந்து கொள்ளும் ஒரு தமிழரை தூதராக நியமிக்க வேண்டும்.
இந்திய அமைதிப் படையை அங்கு அனுப்பி இலங்கையில் அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும்.
காலாவதியான எம்பி பதவியை தியாகம் செய்யப் போவதாக திமுக அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட 'தியாக' மனப்பான்மை திமுகவுக்கு மட்டுமே உண்டு என்றார்.