மணல் கடத்தலில் கே.சி.பழனிசாமி- ஜெ புகார்!
கரூர்: கரூர் திமுக எம்.பி. கே.சி. பழனிச்சாமி மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளிடுட்டுள்ள அறிக்கையில்,
கரூர் மாவட்டத்தில் திம்மாச்சிபுரம், கட்டளை, வாங்கல், நெரூர், மருதூர், வதியம் லாலாபேட்டை ஆகிய இடங்களிலும், திருச்சி மாவட்டத்தில் அன்பில், நொச்சியம், திருவேங்கிமலை, அய்யம் பாளையம், முசிறி, வரதராஜபுரம், தொட்டியம் ஆகிய இடங்களிலும் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு எடுக்கப்படும் மணலில் இரண்டு யூனிட் மணலுக்கு பதில் நான்கு யூனிட் மணலும், நான்கு யூனிட் மணலுக்கு பதில் ஆறு யூனிட் மணல் கடத்துப்படுகிறது.
அரசு தொகையான ரூ.626த்தை செலுத்தி விட்டு மறைமுகமாக கோயம்புத்தூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மணல் கடத்தப்பட்டு, அங்கு இரண்டு யூனிட் மணல் ரூ 5,000 வரை விற்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
இதன் பின்னணியில் கரூர் திமுக எம்.பி.பழனிச்சாமி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இதைக் கண்டித்து அதிமுக சார்பில் கரூர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்டக் கழகங்களின் சார்பில், நாளை (22 ம் தேதி) குளித்தலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் அதிமுக அமைப்புச் செயலாளர் ம.சின்னசாமி தலைமையிலும், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் கே.கே.பாலசுப்ரமணியன், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.