சிவகாசி பட்டாசு ஆலைகளில் வருமான வரி சோதனை
சிவகாசி: சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் அதிரடி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. தீபாவளி பட்டாசுத் தயாரிப்பில் மும்முரமாக பட்டாசு ஆலைகள் இருந்து வரும் நிலையில் நடந்த இந்த சோதனை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசியில் பட்டாசுத் தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. குட்டி ஜப்பான் என்ற செல்லப் பெயரும் சிவகாசிக்கு உண்டு. தீபாவளி சமயம் என்பதால் தற்போது அங்கு பட்டாசுத் தயாரிப்பும், விற்பனைக்கு பட்டாசுகளை அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகின்றன. விடிய விடிய வியாபாரமும், உற்பத்தியும் களை கட்டியுள்ளது.
இந்த நிலையில், சிவகாசியில் உள்ள 2 முக்கிய பட்டாசுத் தொழிற்சாலைகளில் நேற்று அதிரடி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
300 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். 17 வீடுகள், சென்னை, ஈரோடு மற்றும் சிவகாசியில் உள்ள 54 அலுவலகங்களில் சோதனை நடந்தது.
இந்த பட்டாசு நிறுவன உரிமையாளர்கள் பட்டாசுத் தொழில் மட்டுமல்லாது கல்வி நிறுவனங்கள், ரெடிமேட் உடைகள் தயாரிப்பு, பைனான்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றையும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி மும்முர சமயத்தில், நடந்த இந்த அதிரடி ரெய்டால் சிவகாசியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாய்க்கு ஊசி போட லஞ்சம்-டாக்டர் கைது:
இதற்கிடையே சென்னையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், நாய்க்கு தடுப்பூசி போட ரூ. 400 லஞ்சம் கேட்ட கால்நடை மருத்துவர் ஒருவரும், சர்வேயர் ஒருவரும் பிடிபட்டனர்.
லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு பவானீஸ்வரி மேற்பார்வையில், துணை சூப்பிரண்டுகள் பொன்னுசாமி, ராஜேந்திரன், இக்பால், அலிபாஷா, இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, அருள்செல்வன் ஆகியோர் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
சென்னை விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் தான் வளர்க்கும் நாய்க்கு தடுப்பு ஊசி போடுவதற்காக, சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை உதவி டாக்டர் கமலேஷ் என்பவர் ரூ.400 லஞ்சம் கேட்பதாக புகார் கொடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கமலேஷுக்கு வலை விரித்தனர். ஊசி போட டாக்டர் கமலேஷ் ரூ.400 லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதேபோல, நிலத்துக்கு பட்டா மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவு சர்வேயராக பணிபுரியும் சகாயராஜ் (32) என்பவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்பதாக சிவில் என்ஜினீயர் நடராஜன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.5 ஆயிரம் பணத்தை ஒரு பேப்பரில் சுருட்டி மடக்கி ரூ.1 லட்சம் என்று ஏமாற்றி என்ஜினீயர் நடராஜன் மூலம் சகாயராஜிடம் கொடுத்தனர். சகாயராஜ் அந்த பணத்தை வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள சகாயராஜின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.