மதுரை-ரிங் ரோடு கட்டணம் உயர்கிறது
மதுரை: மதுரை சுற்றுச்சாலையினை பயன்படுத்தி செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி எட்டு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இக் கட்டண உயர்வு வருகிற நவ-1 ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
மதுரை சுற்றுச்சாலையினை பயன்படுத்தி செல்லும் வாகனங்களுக்கு எட்டு சதவீத சுங்கவரி உயர்வு செய்ய மாநகராட்சி மாமன்றத்தில் கடந்த 25.9.2008 அன்று முடிவு செய்யப்பட்டது.
இக் கட்டண உயர்வானது நவம்பர் 1ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
ஒன்று முதல் ஐந்து வரையிலான சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும் கார் மற்றும் ஜீப்புகளுக்கு 40 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், வியாபார நோக்குடன் செல்லும் வேன் மற்றும் வாடகை வேன்களுக்கு சுங்கவரியானது 65 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
அதே போன்று கனரக வாகனங்களான லாரி மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 80 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
இக் கட்டண உயர்வானது அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் என மதுரை மாநகராட்சி ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.