ரேஷன் கடைகளில் பாமாயில் விலை குறைப்பு
சென்னை: ஏழைகளின் நிதிச் சுமையை மேலும் குறைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் பாமாயில் எண்ணெய் விலையை 5 ரூபாய் குறைத்து தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இனிமேல் ரேஷன் கடைகளில் பாமாயில் ஒரு லிட்டர் ரூ. 35க்கு (முன்பு ரூ. 40) விற்கப்படும்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் லிட்டர் ரூ. 40 என்பதற்குப் பதில் ரூ. 35க்கு விற்கப்படும். ரூ. 5 விலை குறைக்கப்புகிறது.
சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு சமையல் பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. முதலில் முதல்வர் கருணாநிதி கிலோ அரிசி ரூ. 2 என்ற புரட்சிகர திட்டத்தை அமல்படுத்தினார். பின்னர் இது ரூ. 1 ஆக குறைக்கப்பட்டது.
பொதுமக்களின் நிதிச் சுமையை மேலும் குறைக்கும் வகையில், மானிய விலையில் மளிகைப் பொருள்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ரூ. 62 மதிப்புள்ள பொருட்கள் இத்திட்டத்தின் கீழ் ரூ. 50க்கு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அக்டோபர் 2ம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தற்போது அந்தத் திட்டத்தின் கீழ் பாமாயில் விலையை ரூ. 40 என்பதிலிருந்து ரூ. 35 ஆக குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகையில், மானிய விலையில் மளிகைத் திட்டத்தின் கீழ் மேலும் சில பொருட்களை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தினசரி 1.5 லட்சம் மளிகைப் பொருள் பாக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
இந்தப் பொருட்களை தற்போது இரண்டு முன்னணி நிறுவனங்களிடமிருந்து அரசு பெற்று, அரசு கிட்டங்கிகளில் இருப்பு வைத்து பாக்கெட் போட்டு ரேஷன் கடைகள் மூலம் விற்று வருகிறது.
ஆனால் இதனால் போக்குவரத்து செலவும், தாமதமும் ஏற்படுகிறது. எனவே இந்த பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை இதில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவர்.
ரூபாய்க்கு 2 கிலோ அரிசி என்ற திட்டம் ஒரு ரூபாய் என்று விலை குறைக்கப்பட்ட பின்னரும் கூட அதே தரத்திலான அரிசியே விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றார் வேலு.