லஞ்சம்-ஈரோடு பதிவாளர் அலுவலகத்தில் ரெய்ட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளி இனாமாக வசூல் செய்யப்பட்ட ரூ.70,000த்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் கீழ் 16 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த சார்பதிவாளர் அதிகாரிகள் ஒவ்வொருவரும் தீபாவளி இனாமாக ஒரு தொகையை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சில சார் பதிவாளர்களும் தீபாவளி இனாம் வசூல் செய்து பதிவாளரிடம் கொடுக்க தயாராக இருந்தனர். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பதிவாளர் அலுவலகத்தில் திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்து ரூ 25,000 கைப்பற்றப்பட்டது. மேலும் இனாமாக கொடுக்க வைத்திருந்த தொகை உள்பட லஞ்சப் பணம் ரூ.70,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். பின்னர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.