தேவர்-மருதுபாண்டியர் குருபூஜை: ஆயுதம், பேனர்களுக்கு தடை
சிவகங்கை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 27ம் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் மற்றும் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.
அதேபோல அக்டோபர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், தேவர் குருபூஜை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
எஸ்.பி. கண்ணன், தேவகோட்டை சப்-கலெக்டர் தாரேஸ் அகமது, ஆர்.டி.ஓ., ஷாஜகான், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் முடிவில் போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் வரிச்சியூர், பூவந்தி, சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று அதே வழியில் திரும்ப வேண்டும்.
ராமநாதபுரத்தில் வரும் வாகனங்கள் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை வழியாக வந்து, திரும்ப வேண்டும்.
ஆர்.எஸ்., மங்கலத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருவாடானை, திருவேகம்புத்தூர் வழியாக வந்து, செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை, திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் திருவாடானை, திருவேகம்புத்தூர் வழியாக சென்று, திரும்ப வேண்டும்.
அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, காரைக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் கல்லல் வழியாக சென்று, அதே வழியில் திரும்ப வேண்டும்.
சாலைக்கிராமத்திலிருந்து வரும் வாகனங்கள் சூராணம், சருகணி வழியாக வந்து, திரும்பி செல்ல வேண்டும்.
காஞ்சிரங்குளம் (திருப்புவனம்) பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் விரகனூர், சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை வழியாக வந்து, செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து பசும்பொன்னிற்கு செல்லும் வாகனங்கள் திருப்புவனம், மானாமதுரை வழியாக சென்று, கமுதி, கண்ணார்பட்டி சந்திப்பு, கீழராமநதி, காரியாபட்டி, ரிங்ரோடு வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை, திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் திருப்புத்தூர், சிவகங்கை, மானாமதுரை வழியாக பசும்பொன் சென்று, திரும்ப வேண்டும்.
காளையார்கோவில் நினைவிடத்திற்கு வரும் பல்வேறு அமைப்புகளின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 22 அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இடம் பெற்றன. அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி நேரம் ஒதுக்கீடு பெற வேண்டும்.
ஆயுதம்-பேனர்-பட்டாசுகளுக்குத் தடை
வாகனங்களில் ஆயுதங்கள், வெடி பொருட்கள், பட்டாசுகள் கொண்டு செல்ல கூடாது. ஜாதி தொடர்பான பேனர்கள் மற்றும் படங்கள் வாகனங்களில் ஒட்டக்கூடாது. பிற ஜாதியினரையோ அல்லது கட்சியினரையோ புண்படுத்தும் கோஷங்கள் எழுப்ப கூடாது.
வாகனங்களில் ஒலி பெருக்கி பொருத்தக் கூடாது. வாகனங்களில் மேற்கூரையில் அமர்ந்து செல்லகூடாது. குடிபோதையில் வாகனங்கள் ஓட்ட கூடாது. லாரி, மினி லாரி போன்ற திறந்த வெளி வாகனங்களில் செல்ல கூடாது.
சமாதிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றுள்ள அமைப்புகளும், கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் அஞ்சலி செலுத்தி முடித்துவிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.