நகர்ந்தது புயல் சின்னம்; குறைந்தது மழை-வந்தது வெயில்
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மன்னார் வளைகுடாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால், கடந்த நான்கு நாட்களாக சென்னையை புரட்டிப் போட்டு விட்ட மழை நின்று விட்டது. நான்கு நாட்ளுக்குப் பிறகு இன்று காலை முதல் ேலசாக வெயில் அடித்து வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து விட்டது. குறிப்பாக சென்னை நகரம் வெள்ளக்காடாகிப் போனது.
இந்த நிலையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடா நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன மழை குறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஆங்காங்கே லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் பொதுவாக வானம் மேக மூட்டமாக காணப்படும். லேசான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழைக்கு இனி வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதலே சென்னையில் மழை நின்று விட்டது. இன்று காலை முதல் பிற்பகல் வரை நல்ல வெயில் அடித்தது. சுத்தமாக மழை இல்லாததால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நான்கு நாட்களுக்குப் பிறகு வெயில் அடிக்கத் தொடங்கியதால் மக்கள் தீபாவளி பர்ச்சேஸுக்கும், துணிமணிகளை துவைத்துக் காயப் போடுவதிலும் பிசியாகி விட்டனர்.
சென்னை நகரில் இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றிப் பார்த்தார்.