தேவர் குருபூஜை-பசும்பொன் செல்கிறார் ஜெ
சென்னை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். பசும்பொன் செல்லும் அவர் அங்குள்ள தேவர் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார்.
இது குறித்து அதிமுக தலைமை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் நினைவிடத்தில், வரும் 30ந் தேதி பிற்பகல் 1 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பசும்பொன் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
மேலும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் இயக்கப் பாடல்கள் அடங்கிய குறுந் தகட்டினையும், பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் சார்பில், தேவர் திருமக னாரின் வரலாறு அடங்கிய குறுந் தகட்டினையும் வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.