மும்பை பஸ்சில் துப்பாக்கியுடன் மிரட்டல்-பிகார் வாலிபர் சுட்டுக் கொலை
இது அப்பட்டமான கொலை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இரும்புத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வட மாநிலத்தவர்களுக்கு எதிராக ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் அமைப்பினரும் சிவ சேனாவும் கடும் வன்முறையில் இறங்கியுள்ளன. இந் நிலையில் ராஜ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 3 வட மாநிலத்தவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் பிகாரைச் சேர்ந்த ராகுல் ராஜ் என்ற வாலிபர் மும்பை குர்லா பகுதியில் நேறறு காலை மாநகரப் போக்குவரத்துக் கழக இரண்டடுக்கு பஸ்சில் ஏறினார்.
டிரைவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பஸ்சை நிறுத்திய அவர் மேல் தளத்தில் போய் அமர்ந்தார். ராஜ் தாக்கரேவுக்கு எதிராக கோஷமிட்டார். இதையடுத்து கீழ் தளத்தில் இருந்த பயணிகள் இறங்கி ஓடிவிட்டனர். ஆனால், மேல் தளத்தில் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அந்த பஸ்சை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரை சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால், அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி ராஜ் தாக்கரேவுக்கும் பிகாரிகள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் கோஷமிட்டார்.
ஆனால், யாரையும் சுடவில்லை. ராஜ் தாக்கரேவிடம் பேச வேண்டும் என்று கூறி, அவருக்கு போன் செய்து செல்போனைத் தன்னிடம் தருமாறு போலீசாரிடம் அவர் கூறினார். இதை தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் கொண்டிருந்தன.
இவ்வாறு அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே ஒரு போலீஸ் வேன் அங்கு வந்து நின்றது. கேமராக்களை மறைத்தபடி நின்ற அந்த வேனில் இருந்த போலீசார் திடீரென அவரை சுட்டுக் கொன்றனர்.
அவரை உயிருடன் எளிதாகவே கைது செய்திருக்க முடியும் என்ற நிலையில் அவர் தொலைக்காட்சி கேரமாக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டது பிகாரில் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது.
அவர் போலீசாரை நோக்கி சுட்டதால் தான் சுட்டோம். துப்பாக்கிக்கு துப்பாக்கி தான் பதில் என மகாராஷ்டிர துணை முதல்வர் கூறியுள்ளார்.
பஸ்சில் இருந்த பயணிகளை அவர் சிறை பிடிக்க முயன்றதால் தான் கொல்லப்பட்டார் என போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார், அமைச்சர்கள் லாலு, பாஸ்வான் ஆகியோர் டெல்லியில் பிரதமரை சந்தித்து இந்த துப்பாக்கிச் சூடுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ராகுல் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பிகாரில் மகாராஷ்டிரத்துக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமாகியுள்ளது.
கொல்லப்பட்ட ராகுல் ராஜ் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆவார்.
ராகுல் வீட்டில் நிதிஷ்:
இந் நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் இன்று காலை பாட்னாவில் உள்ள ராகுல் ராஜின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு நேரில் இரங்கல் தெரிவித்தார்.