இன பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண தயார்-ராஜபக்சே
த இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராமுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில்,
அரசியல் பிரச்சனைக்கு ராணுவத் தீர்வு இல்லை என்பதை நான் நன்கறிவேன். இதைத் தான் நான் எப்போதும் கூறி வருகிறேன். ராணுவத் தீர்வு என்பது தீவிரவாதிகளுக்கு. அரசியல் தீர்வு என்பது மக்களுக்கு.
எனது அரசைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவும், அதிகாரப் பகிர்வுக்கும், ஜனநாயக, மொழி உரிமைகளை வழங்கவும் தீவிரமாக உள்ளது.
குறிப்பாக தமிழ் சகோதரக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் உரிய உரிமைகளை வழங்கத் தயார்.
எல்டிடிஈக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்யவோ அவர்களுக்கு பிரச்சனை தருவதற்காகவோ அல்ல. இந்தப் போரால் இடம் பெயர்ந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வோம்.
அந்த மக்களுக்கு உணவு, மருந்து கிடைக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களது மறுவாழ்வுக்கும் உரிய நடவடிக்கைகளை வெளிப்படையாகவே செய்வோம்.
இப்போதும் கூட விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அவர்கள் சரண் அடையட்டும். ஜனநாயக பாதைக்கு வரட்டும்.
இந்திய வெளியுறவு அமைச்சர், வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் எனது சகோதரர் பாஸில் நடத்திய பேச்சுவாக்த்தை திருப்தி அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 800 டன் மருந்து, உணவுப் பொருட்களை அனுப்பும் இந்திய அரசின் திட்டத்தை வரவேற்கிறேன். தனியாக தமிழ்நாடும் மனிதாபிமான அடிப்படையில் மருந்து, உணவு அனுப்ப திட்டமிட்டுள்ளதையும் வரவேற்கிறேன்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதியை நான் பெரிதும் மதிக்கிறேன். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற அவரது நிலை பாராட்டத்தக்கது.
அவரை இலங்கைக்கு வருமாறு இந்திய அரசு மூலமாக அழைப்பு விடுக்கவுள்ளேன்.
இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண நான் '4 Ds" (Demilitarisation-படைகள் வாபஸ், Democratisation-ஜனநாயகம், Development-வளர்ச்சி, and Devolution-அதிகாரப் பகிர்வு) திட்டத்தை முன் வைத்துள்ளேன்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று எங்கள் அரசியல் சட்டத்தில் 13வது திருத்தத்தை செய்தோம். ஆனால், அதை வட கிழக்கில் அமல்படுத்த முடியவில்லை. காரணம், முந்தைய அரசுக்கும் வட கிழக்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களுக்கும் அரசியல் தைரியம் இல்லை. ஆனால், அதை நான் செய்வேன் என அறிவித்தேன்.
கிழக்குப் பகுதியில் புலிகளை அப்புறப்படுத்திவிட்டு அங்கு உள்ளாட்சித் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இப்போது அங்கு தமிழ் முதல்வர் பதவியில் இருக்கிறார். அங்கு வளர்ச்சிப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.