படகில் வந்த 5 இலங்கை தமிழ் வாலிபர்கள்-க்யூ பிராஞ்ச் விசாரணை
ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து தப்பி அகதிகளாக படகில் வந்த 5 தமிழ் வாலிபர்கள் கடலோர காவல் படையினரால் பிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு புலிகளுடன் தொடர்புள்ளதா என க்யூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய கடலோர காவல்படையினர் ராமநாதபுரத்தை அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எம்.என்.ஆர்.1-230412 என்ற எண் கொண்ட இலங்கையைச் சேர்ந்த ஒரு படகை வழிமறித்தனர்.
அதிலிருந்த 5 வாலிபர்களையும் மண்டபம் கடலோரக் காவல் படை முகாமிற்கு கொண்டு வந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
அந்த ஐவரும் கிளிநொச்சியை சேர்ந்த தமிழர்கள் எனத் தெரியவந்தது. அவர்களது பெயர் சுதர்சன் (18), கமலதாசன் (24), தில்லைநாதன் (24), ஸ்ரீதரன் (22), கோகுலராஜன் (24).
மன்னார் மாவட்டம் விளப்பாடு பகுதியில் தங்கி சுனாமி உதவி மூலம் இலங்கை அரசு வழங்கிய படகை வைத்து கடந்த 4 ஆண்டுகளாக மீன்பிடித்து தொழில் செய்து வந்ததாகவும், தற்போது இலங்கையில் நடக்கும் போர் காரணமாக உயிரை காப்பாற்றிக் கொள்ள அகதிகளாக இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் க்யூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விமானம் முலம் வந்த 6 தமிழக மீனவர்கள்:
இதற்கிடையே கடலில் மீன் பிடிக்க சென்று இலங்கையில் சிக்கித் தவித்த 6 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்களான வினோத் (28), குமார் (32), தேசிங்கு (55), பர்ணபாஸ் (67), ஆறுமுகம் (36), கோபால் (60) ஆகியோர் கடந்த மாதம் 10ம் தேதி இயந்திர படகில் மீ்ன் பிடிக்கச் சென்றனர்.
நடுக் கடலில் படகு பழுதானது. 6 பேரும் கடலில் தவித்தனர். தங்களிடம் இருந்த உணவு தண்ணீர் காலியாகிவிட்ட நிலையில் படகிலேயே மயங்கினர்.
படகு காற்று போன திசையில் சென்று இலங்கையின் திரிகோணமலையில் கரையொதுங்கியது. அவர்களை சில இலங்கை மீனவர்கள் காப்பாற்றி கொழும்பில் உள்ள அகதிகள் முகாமில் சேர்த்தனர்.
இந் நிலையில் மீனவர்களாக் காணவில்லை என சென்னை மாவட்ட கலெக்டர், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து தேடுதல் வேட்டையுடன் விசாரணையும் நடந்தது. அப்போது 6 பேரும் இலங்கையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசின் உதவியை தமிழகம் நாடியது.
இதைத் தெடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 6 பேரையும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை அனுப்பி வைத்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.