தென் கொரியாவை அழிப்போம்-வட கொரியா எச்சரிக்கை
கம்யூனிஸ நாடான வட கொரியாவுக்கும் அமெரிக்க ஆதரவு நாடான தென் கொரியாவுக்கும் இடையே எந்த நேரத்திலும் மோதல் நேரும் சூழல் பல காலமாக நிலவி வருகிறது.
தென் கொரியாவில் ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் நிலை கொண்டுள்ளன. சோவியத் யூனியனி்ன் வீழ்ச்சிக்குப் பின் வட கொரியாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா எவ்வளவோ முயன்றும் வெல்லவில்லை.
அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தனது நாட்டு ஏவுகணைகளின் சக்தியை அதிகரித்து வரும் வட கொரியா, அணு குண்டு சோதனையும் நடத்தி அமெரிக்கா-தென் கொரியாவுக்கு பாடம் புகட்டியது.
அணு ஆயுதம், அதை செலுத்தும் திறன் கொண்ட ஏவுகணைகளைக் கொண்டுள்ள வட கொரியாவிடம் அமைதியை நிலை நாட்ட தென் கொரியாவும் அமெரிக்காவும் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஆனாலும் அவ்வப்போது ஏதாவது விவகாரத்தில் இரு நாடுகள இடையே மோதல் நடப்பது வழக்கம்.
சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் தலைமையிலான கம்யூனிஸ அரசை தூக்கி எறியுமாறு வட கொரியாக்குள் நோட்டீஸ் வினியோகம் நடந்தது.
வட கொரியாவில் இருந்து தப்பி வந்த ஒருவர் தென் கொரிய உதவியுடன் பலூனில் வட கொரியாக்குள் பறந்தபடி அரசுக்கு எதிராக 40,000 நோட்டீஸ்களை வீசிவிட்டு வந்தார்.
இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தங்களைத் தாக்கும் திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ள வட கொரியா, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் தென் கொரியாவை தரை மட்டமாக்குவோம். அங்கு எதுவுமே மிஞ்சாது. சாதாரண ஏவுகணையெல்லாம் பயன்படுத்த மாட்டோம். எடுத்த எடுப்பிலேயே கடும் தாக்குதல் நடத்துவோம். இதை சியோலில் உள்ள அமெரிக்காவின் கைப்பாவைகள் உணர்ந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா சொல்வதைக் கேட்டு தவறு செய்ய வேண்டாம். போர் மூண்டால் அது வெறும் தாக்குதலாக இருக்காது. தென் கொரியாவை வட கொரியாவுடன் சேர்க்கும் போராக இது இருக்கும் என வட கொரிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென் கொரியாவை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை பல ஆண்டுகளாகவே வட கொரியா தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அணு ஆயுதங்களும் அடங்கும்.
இதற்கிடையே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் டாரோ ஆசோ கூறியுள்ளார்.