புலிகளின் முக்கிய கடற்படை தளம் வீழ்ந்தது
நச்சுகுடாவில் உள்ள இந்த புலிகளின் முகாம் அதன் கடற் பிரிவின் முக்கியத் தளமாகும். இந்தத் தளத்தை மூன்று திசைகளில் இருந்து தாக்கி கைப்பற்றிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயபுரம் என்ற பகுதியும் தங்கள் வசம் வந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து புலிகள் தரப்பில் மறுப்பு ஏதும் வெளியிடப்படவில்லை,
அதே போல பூந்தேரின் பகுதிக்குச் செல்லும் நெடுஞ்சாலையையும் ராணுவம் கைப்பற்றி அதை துண்டித்துள்ளது.
60 வீரர்கள் பலி-பின்வாங்கிய ராணுவம்:
இதற்கிடையே கிளிநொச்சியை ஒட்டிய அக்கராயன் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும் சண்டையில் 60 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இலங்கை ராணுவம் ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
விடுதலைப் புலிகள் பதிலடி தாக்குதல் நடத்தவே இரு தரப்பினருக்கும் இடையே 12 மணி நேரத்திற்கும் மேலாக கடும் சண்டை நடந்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு தொடங்கிய சண்டை மாலை 6 மணி வரை நீடித்ததாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலில் இலங்கை ராணுவ வீரர்கள் 60 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும், புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அக்கராயன் பகுதியை கைப்பற்றும் திட்டத்தை கைவிட்டு ராணுவம் பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
போரில் இறந்த வீரர்களின் உடல்களை மீட்டு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்போம் என்று விடுதலைப் புலிகள் அறிவி்த்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இலங்கை ராணுவத்திடம் இருந்து பெருமளவில் ஆயுதங்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.