இலங்கை: தமிழகத்தில் நாளை கடை அடைப்பு
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு தலையிடக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை கடைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி நாளை (31ம் தேதி) தமிழ் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இதில் சுமார் 25 லட்சம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள். மளிகை வியாபாரிகள், மருந்து வியாபாரிகள், காய்-கனி, வியாபாரிகள், டீக்கடை, தையல் கலைஞர்கள் உள்பட பலதரப்பட்ட வியாபாரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கடையடைப்பு செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உணவு விடுதிகள், அடகு கடைகள், நகைக்கடை நடத்தும் பிற மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டியிருக்கும் என்பதால் அத்தியாவசிய பொருட்களை இன்றே பொதுமக்கள் வாங்கி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக முதல்வர் கொடுத்த கடும் நெருக்கடிக்கு பிறகே இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு சில உறுதி மொழிகளைக் கொடுத்துள்ளது.
ஆனால், இந்த உறுதி மொழியால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. நார்வே தூதுக்குழு வரவழைக்கப்பட வேண்டும். இலங்கையில் போரை நிறுத்தாமல், அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுப்பது சாத்தியமே இல்லை.
எனவே மத்திய அரசுக்கு தமிழர்கள் சார்பில் நிர்பந்தம் கொடுக்கவே இந்த கடையடைப்பு நடத்துகிறோம் என்றார்.