மின் ஊழியர் குடும்பத்தை வாட்டும் மாலைக்கண் நோய்
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் பரமசிவன். தற்காலிக மின்ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வடக்குவாசெல்வி. இவர்களுக்கு வளர்மதி, அனிதா ஆகிய மகள்களும், ரஞ்சித் என்ற மகனும் உள்ளார். இவர்கள் முறையே 9,5,4 வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த 19ம் தேதி சடையப்பபுரத்தில் ஒருவரது வீட்டில் பழுதான மின்வயரை அகற்றி புதிய வயர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பரமசிவன் மின்சாரம் தாக்கி பலியானார். அவருடன் வேலை பார்த்த பேச்சிமுத்து என்பவரும் இறந்தார்.
இது ஒருபுறம் இருக்க பரமசிவன் குடும்பத்தின் நிலை பரிதாபமாக உள்ளது. இருதய நோயால் பாதிக்கப்பட்ட பரமசிவனின் மனைவி வடக்குவாசெல்வி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரம் மருத்துமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் இவரால் எந்த வேலையும் செய்ய முடியாது.
கணவனை இழந்த இவர் தனது மூன்று குழந்தைகளை பார்த்து ஆறுதல் அடையலாம் என்றால் கூட அதற்கும் வழியில்லை. காரணம் அவர்கள் மூவருக்குமே மாலைக்கண் நோய்.
மாலை 6 மணிக்கு பிறகு இவர்கள் பார்வை இழந்து விடுகின்றனர். பிறக்கும் போது நன்றாக இருந்த இக்குழந்தைகளை 8 வயதுக்கு பிறகுதான் இந்நோய் தாக்கியுள்ளது. வசதிக்கு தகுந்தபடி மருத்துவர்களிடம் காண்பித்தும் பயன் இல்லை.
நகரத்தில் பிரசித்த பெற்ற கண் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற போதிய வசதியில்லாமல் இவர்கள் அவதியுற்று வருகின்றனர்.
சொந்த வீடு இல்லாமல் மூன்று குழந்தைகளுடன் வடக்குவாசெல்வி குடித்தனம் நடத்துவது தனது அண்ணன் அண்ணாதுரைக்கு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில்தான். இவர்களின் கஷ்டத்தில் பரமசிவனின் தாயார் தெய்வானையும் பங்கு வகிக்கிறார்.
நாளொன்றுக்கு 100 ரூபாய் கொண்டு வந்த கணவனையும் காலன் எடுத்துக் கொண்டதால் வடக்குவாசெல்வியை வறுமை மட்டுமின்றி மாலைக்கண் நோயுள்ள குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை பற்றிய சிந்தனையையும் வாட்டி வதைக்கிறது.
உண்ண உணவு, உறங்க இடம் இவை கூட சொந்தமில்லாத இவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளது. பரமசிவம் இறந்தபோது விபத்து நிதியாக அரசு ரூ.15 ஆயிரம் வழங்கியது.
அப்போது தொகுதி எம்எல்ஏவான கருப்பசாமிபாண்டியன், அரசிடம் நிவாரண தொகை பெற்று தருவதாகவும், வடக்குவாசெல்விக்கு சத்துணவு மையத்தில் உதவியாளர் பணி பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
இந்த நம்பிக்கையில் வாழ்ந்து வரும் வடக்குவாசெல்விக்கு அரசு உதவ வேண்டும். வாழ்க்கையில் பாதி நேரம் பார்வையின்றி தவிக்கும் அவரது குழந்தைகளுக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணம்.