வேலை இழப்பு இருக்காது!-ப.சிதம்பரம்
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாவது குறையுமே தவிர பெரிய அளவில் வேலைகள் பறிபோகாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், இன்னும் 10 நாட்களில் சிவில் விமான போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம், உருக்கு, நிதி சேவைகள், ரியல் எஸ்டேட், சிமெண்ட், கட்டுமானம் ஆகிய முக்கிய துறைகளில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம்பேர் வரை வேலை இழப்பார்கள் என்று பிரபல தொழில் கூட்டமைப்பான அசோசெம் கணித்துள்ளது.
இந் நிலையில் ப.சிதம்பரம் கூறுகையில்,
நமது பொருளாதாரம், வேலையை உருவாக்கும் பொருளாதாரமே தவிர, வேலையை பறிக்கும் பொருளாதாரம் அல்ல. பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி என்றால், வேலைவாய்ப்பு உருவாகும் வேகம் குறையும் என்று மட்டுமே அர்த்தம்.
9 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தபோது உருவான வேலைவாய்ப்புடன் ஒப்பிடுகையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது உருவாகும் வேலைவாய்ப்பு குறைவாகவே இருக்கும். பெரிய அளவில் வேலைகள் பறிபோகாது.
அசோசெம்மின் கணிப்புக்கு திட்ட கமிஷன் துணை தலைவரும், மத்திய வர்த்தக ராஜாங்க மந்திரி ஜெயராம் ரமேஷ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பணவீக்கம் மேலும் குறையும்:
சர்வதேச பொருளாதார மந்த நிலை, இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும். ஆனால் அந்த பாதிப்பு அதிகமாக இருக்காது. விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததால், பண வீக்க விகிதம், 11 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இது மேலும் குறையும் என்று நம்புகிறோம், என்றார் சிதம்பரம்.
சிவகங்கை ஐடிஐக்கு ரூ. 35 லட்சம்:
இந் நிலையில் ப.சிதம்பரத்தின் அலுவலக செய்தி குறிப்பில்,
சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ. (தொழிற் பயிற்சி நிறுவனம்), 2008 -2009 -ம் ஆண்டில் தொழிற்பயிற்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிலை உயர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரில் உள்ள ஐ.டி.ஐ. பேப்ரிகேஷன் (பிட்டிங் மற்றும் வெல்டிங்) பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்படி ரூ.3.5 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.2 கோடியே 62 லட் சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதித்துள்ளது. முதல் ஆண்டுக்கு (2008 -2009) ரூ.35 லட்சம் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 35 லட்ச ரூபாய் நிதி, ஐ.டி.ஐ.க்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.