தந்தை ஓட்டிய பஸ்சில் சிக்கி பலியான குழந்தை
திருவள்ளூர்: தந்தை ஓட்டிய ஸ்கூல் பஸ்சிலேயே அவரது குழந்தை சிக்கி பலியானது. ஊத்துக்கோட்டை அருகே இந்த துயர சம்பவம் நடந்தது.
நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஞானவேல் (35) தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார்.
தினமும் நம்பாக்கத்தைச் சேர்ந்த குழந்தைகளை பஸ்சில் ஏற்ற வரும்போது வீட்டின் முன் பஸ்சை நிறுத்தி சாப்பாடு கேரியரை வாங்கிச் செல்வார்.
நேற்று முன் தினம் காலை தனது வீட்டின் முன் பஸ்சை நிறுத்தினார். அவருடைய மனைவி மகேஸ்வரி சாப்பாடு கேரியரை எடுத்து வந்தார்.
மகேஸ்வரியின் பின்னால் அவர்கது ஒன்றரை வயது குழந்தை சஞ்சய்யும் தத்தி வந்தான். ஆனால், அதை கணவரும் மனைவியும் கவனிக்கவில்லை.
சாப்பாடு கேரியரை வாங்கியவுடன் ஞானவேல் பஸ்சை இயக்கினார். அப்போது குழந்தையின் ஓலக் குரல் கேட்டு தாயார் திரும்பிப் பார்த்தபோது பஸ்சின் சக்கரம் குழந்தையின் காலில் ஏறி தொடைப் பகுதியே நசுங்கிப் போனது.
தாயும் தந்தையும் துடித்து அழுதபடி திருவள்ளூர் அரசு மரு்துவமனைக்கு குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடினர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பிஞ்சுக் குழந்தை பலியானது.