ஜெ. கார் தாக்குதல்: தூண்டிவிட்டது யார்?-சிபிஐ
சென்னை: ஜெயலலிதாவின் கார் மீதான தாக்குதலை தூண்டிவிட்டது யார் என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
இந்திய விடுதலைக்கு போராடிய தேசிய தலைவர்களுள் ஒருவரான, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கச் சென்ற முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் கார் மீதும், பாதுகாப்பு வாகனங்கள் மீதும் கல் வீசப்பட்ட செய்தி அதிர்ச்சி தருகிறது.
கோழைத்தனமான இத்தகைய தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை தூண்டிவிட்டது யார் என்பது பற்றியும் புலன் விசாரணை நடத்த வேண்டும்.
சமூக விரோதிகள், கூலிப் படையினர் எல்லாம் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில் இயங்குவது அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
தன் மீதான தாக்குதலுக்கு அழகிரி தூண்டிவிட்ட ஆட்களே காரணம் என ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ள நிலையில் தா.பாண்டியன் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கபாலு:
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,
எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா கார் மீது கல்வீச்சு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு செய்தியும், அதிமுக தரப்பு செய்தியும் வந்துள்ளன. எதிர்க்கட்சி தலைவருக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை.
தாக்குதலில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அல்லது மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் என்ற நிலைபாடு இல்லாமல் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உண்டு.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் காங்கிரஸ் கட்சியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்றும் தன்னை கைது செய்தால் செய்யட்டும் என்றும் கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி யாரையும் மிரட்டவில்லை. எந்த கட்சியையும், எந்த தலைவரையும் காங்கிரஸ் மிரட்டாது.
தமிழ்நாட்டில் யார்,யார் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என்ற குறிப்புகள் தமிழக அரசிடம் உள்ளது. அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மக்களுக்கு எதிரான இயக்கம். தலைவர் ராஜீவ் காந்தியை கொன்ற இயக்கம். இதை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது என்றார்.
இந்து மக்கள் கட்சி:
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்,
பசும்பொன் கிராமத்திற்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சமூக விரோதிகளால் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். இது திட்டமிடப்பட்டு நடைபெற்ற தாக்குதலாகவே உள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.