For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாத் பூஜை-மும்பையில் பெரும் பீதி

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: சாத் பூஜையையொட்டி லட்சக்கணக்கான வட இந்தியர்கள் கூட உள்ளதால் மும்பையில் பெரும் பீதி நிலவுகிறது.

சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாட் பூஜை வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

மும்பையில் ஜுகு கடற்கரை, கிர்காம் சங்பதி, தானே கிரேக், தாதர் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் சாட் பூஜை விழாக்களில் லட்சக்கணக்கான வட மாநில மக்கள் கூடுவர்.

சூரிய உதயம், சூர்ய அஸ்தமானத்தின்போது ஜுகு கடற்கரையில் லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்கள் கூடுவது வழக்கம். இதற்காக பிகார், உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் மும்பைக்கு வருவதுண்டு.

இப்போது மும்பையில் வசிக்கும் வட மாநில மக்கள் மீது ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சியினர் கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சாட் பூஜை நடக்கவுள்ளதால் மகாராஷ்டிரத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது, குறிப்பாக மும்பை, தானே, புனேவில் பெரும் பீதி நிலவுகிறது.

பூஜைக்கு வருவோர் மீது தாக்குதல் நடந்து பதில் தாக்குதல் நடந்தால் ரணகளம் ஆகிவிடும் என்பதால் இந்த அச்சம் நிலவுகிறது.

இதனால் வழக்கமாகக் கூடும் கூட்டம் இந்த ஆண்டு கூடாது என்று தெரிகிறது.

மோதலைத் தடுக்கும் வகையில் பூஜையில் பஜனைப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும். பிகார், உபியில் பேசப்படும் போஜ்பூரி மொழி பாடல்களைப் பாடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரையும் விமர்சிக்கும் வகையில் மைக் கட்டி பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனர் வைக்கக் கூட விடவில்லை.

இந்தப் பூஜைக்கு எந்த தொல்லையும் தர மாட்டோம் என ராஜ் தாக்கரே கூறியிருந்தாலும் அவரது அமைப்பினர் சும்மா இருப்பார்களா என்று தெரியவில்லை. இதனால் பூஜை நடக்கும் இடங்களிலும் பிகார், உபி மக்கள் வந்திறங்கும் ரயில் நிலையங்களிலும் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லாலு எச்சரிக்கை:

சாட் பூஜையின்போது வட மாநிலத்தவர்களுக்கு எதிராக எதாவது தாக்குதல் நடந்தால் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் எச்சரித்துள்ளார்.

மேலும் ராஜ் தாக்கரேவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு தந்து வரும் ஆதரவை விலக்கும் வகையில் தனது கட்சியின் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜனதா தள எம்பிக்கள் விலகுவர்-நிதிஷ்:

இதற்கிடையே பிகாரிகள் மீது தாக்குதல் தொடர்ந்தால் பிகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் எம்பிக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வர் என அம் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

காங். அமைச்சரும் ராஜினாமா எச்சரிக்கை:

இதற்கிடையே காங்கிரசை நெளிய வைக்கும் வகையில் பிகாரைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சரான ஷகீல் அகமதுவும் பதவி விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்துறை இணையமைச்சராக உள்ள அவர்,

பிகாரை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று லாலு பிரசாத் கூறியிருக்கிறார். அவ்வாறு அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்தால் நாங்களும் அவர்களை பின்பற்றுவோம். நான் எனது அமைச்சர் பதவி, எம்பி பதவியை விட்டு விலகுவேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X