பொருளாதார சிக்கல் இப்போதைக்கு தீராது-பிரதமர்
சர்வதேச பொருளாதார மந்தம், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை குறித்து இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து அவர்களிடம் பேசினார்.
இதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா அதிபர் ஆனந்த் மகிந்த்ரா, ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் காமத், ஏர்டெல் அதிபர் சுனில் பாரதி மிட்டல், எச்டிஎப்சி வங்கித் தலைவர் தீபக் பரேக், டிஎல்எப் தலைவர் சிங், எஸ்ஸார் நிறுவன அதிபர் சசி ருயா, வீடியோகான் அதிபர் ராஜ்குமார் தூத்,
சிஐஐ தலைவர் காமத், எப்ஐசிசிஐ தலைவர் ராஜிவ் சந்திரசேதர், அசோசாம் தலைவர் சஞ்ஞன் ஜிந்தால்,
நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சி்ங் அலுவாலியா, ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிதி குறைந்துவிட்ட நிலையில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர்.
வங்கி அதிபர்கள் பேசுகையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும். வட்டி விகிதம் மேலும் குறைய வேண்டும் என்றனர்.
அவர்களிடையே கவலையோடு உரையாடிய பிரதமர், அமெரிக்கா உள்பட சர்வதேச அளவிலான இந்த சி்க்கலில் இருந்து நமது பொருளாதாரமும் தப்பிக்க முடியாது.
இந்தப் பிரச்சனை மேலும் பெரிதாகவும் வாய்ப்புண்டு. மேலும் நிலைமை சீராக நீண்ட காலம் பிடிக்கலாம்.
நிதி நெருக்கடியால் இந்திய நிறுவனங்களில் முதலீடுகள் குறைய ஆரம்பித்துவிட்டன. வங்கிகளுக்கும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த அசாதாரணமான சூழ்நிலையை சமாளிக்க நாம் உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நாம் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமது செலவுகளைக் குறைத்து நிதி நிலையை சீர்செய்ய வேண்டும். பண பரிமாற்றங்கள் நம்பிக்கையூட்டுவதாக இருக்க வேண்டும். வங்கிகளுக்கு அரசு பக்க பலமாக இருக்கும். டெபாசிட்தாரர்களின் முதலீடுகள் பத்திரமாக உள்ளன. இதில் அச்சப்படத் தேவையில்லை.
பணப் புழக்கத்தை மேலும் அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும், வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் முயல்வோம் என்றார்.