மாவோயிஸ்ட் கண்ணிவெடி: தப்பிய மே.வ. முதல்வர்- பஸ்வான்!
கொல்கத்தா: மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் உயிர் தப்பினார்கள்.
இந்த தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.
மேற்கு வங்காள மாநிலம், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அதிகம்.
அந்த மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்றுவிட்டு, முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் தனித்தனி கார்களில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பரோவா என்ற இடத்தில் அவர்கள் வாகனங்கள் கடந்து சென்றபோது ஒரு பாலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடி பயங்கரமாக வெடித்துச் சிதறியது.
முதலில் முதல்வரின் காரும் அடுத்து பஸ்வான் காரும் கடந்து சென்றபோது நடந்த இந்த தாக்குதலில், அவர்கள் இருவரும் நூலிழையில் உயிர் தப்பினார்கள். அவர்கள் பாதுகாப்புக்காக சென்ற காரில் இருந்த 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
சக்திவாய்ந்த இந்த குண்டு வெடிப்பில் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி துண்டிக்கப்பட்டு விழுந்ததில் போலீசார் சென்ற அந்த காரின் ஒரு பகுதி எரிந்து சேதம் அடைந்தது. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால் இந்த விழாவுக்காக 1200 போலீசார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இளைஞர் அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளை ஒழிப்பதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தும். இது பற்றி பிரதமரிடம் பேசுவேன் என்றார் மத்திய அமைச்சர் பஸ்வான்.