தாக்குதலுக்கு போலீஸ் அதிகாரி உடந்தை-கிருஷ்ணசமி
மதுரை: தன் மீது நடந்த தாக்குதலுக்கு ஒரு போலீஸ் அதிகாரி உடந்தையாக இருந்தாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் ஒரு சுவர் எழுப்பப்பட்டதால் கடந்த 6 மாதமாக இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி பதட்டமாகவே காணப்படுகிறது.
இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவித்து விட்டு நேற்று மாலை அங்கு சென்றேன். அங்கு ஏறக்குறைய 2 மணி நேரம் பிரச்சினை குறித்து ஆலோசித்தேன்.
பின்னர் இதில் சுமூகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து விட்டு மதுரை நோக்கி வந்து கொண்டு இருந்தேன்.
நான் உத்தப்புரம் செல்லும் முன்பு போலீசார் டி.கல்லுப்பட்டி வழியாக அழைத்து சென்றனர். மதுரை திரும்பும்போது எழுமலை வழியாக அழைத்து வந்தனர். வங்கல் இடத்தில் ஒரு சிலை பக்கம் சென்றபோது மர்ம' கும்பல் வழிமறித்தது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது எனக்கு பாதுகாப்புக்கு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் குறைவான போலீசார் வந்தனர். ஆனால் போலீசார் அந்த கும்பலை தடுக்கவில்லை. தடியடி, கண்ணீர் புகை எதுவும் வீசவில்லை.
அந்த சமயத்தில் மேலும் 300 பேர் திரண்டு என மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். ஆனால் போலீசார் கண்டு கொள்ளவில்லை. என்னை கட்சி தொண்டர்கள் பாதுகாத்தனர்.
என் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒரு போலீஸ் அதிகாரியை உடந்தையாக இருந்து உள்ளார். அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் கட்சி தொண்டர்கள் கட்டுப்கோப்பாக வந்தனர். கோஷம் போட்டதற்காக என் மீது தாக்குதல் நடத்தி இருக்க கூடாது. உத்தப்புரம் பிரச்சினையை விரைவில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்களே நடவடிக்கை எடுப்போம்.
தலைவர்களின் சிலையால் பிரச்சினை நடப்பதாக இருந்தால் தமிழகம் முழுவதும் சிலைகளை அகற்ற நாங்கள் போராட வேண்டியது வரும் என்றார் கிருஷ்ணசாமி.
இதற்கிடையே கிருஷ்ணசாமி மீதான தாக்குதலையடுத்து மதுரை, நெல்லை மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.