வேலூர் அருகே தீண்டாமை வேலி அகற்றம்!
வேலூர்: வேலூர் மாவட்டம், சோலையூர் ஊராட்சிக்கு உட்பட்டுள்ளது பில்லாந்திபட்டு கிராமம்.
இந்த கிராமத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு சமுகத்தினரால் தீண்டாமை வேலி போடப்பட்டது.
இதனால் ஒரு சமூகத்தினர் உபயோகித்து வந்த பாதையை அடைத்து மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் திடீரென 125 அடி நீளத்திற்கு இரும்பு வேலி அமைத்தனர்.
இதற்கு பல முக்கிய அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும், தலித் இயக்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த தீண்டாமை வேலியை மாவட்ட நிர்வாகம் உடனே அகற்றாவிட்டால் அக்டோபர் 22ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சம்பத் தலைமையில் நாங்களே தீண்டாமை வேலியை அகற்றுவோம் என்று அந்தக் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தது.
இதையடுத்து இந்தப் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டது. வேலூர் கோட்டாட்சியர் விஜயாள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் கூட்டத்தில் இரும்பு வேலியை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நில வேலியை உடனே அகற்றும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அந்த சமூகத்தினர் வேலியை நேற்றிரவு அகற்றிவிட்டனர்.