யு.எஸ்: இன்னொரு இந்திய மாணவி படுகொலை
அமெரிக்காவில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மர்மாக கொலை செய்யப்பட்டுள்ளது இது ஐந்தாவது முறையாகும்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த அபர்ணா (24) சியாட்டிலில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பார்ட் டைமாக பணியாற்றிக் கொண்டே எம்எஸ் படித்து வந்தார்.
இந் நிலையில் அவர் தனது அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கடந்த வெள்ளிக்கிழமையே அவர் கொலையாகியுள்ளார். 3 நாட்களுக்குப் பின்னரே இந்த விவரம் தெரியவந்தது.
அபர்ணாவின் தந்தை ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசியராக உள்ளார்.
கடந்த செப்டம்பரில் சிகாகோவில் செளம்யா ரெட்டி என்ற மாணவி கொலையானார். அவரைத் தொடர்ந்து பென்சில்வேனியாவில் ஸ்ரீனிவாஸ், லூசியானா பல்கலைக்கழகத்தில் கிரண்குமார், சந்திரசேகர் ரெட்டி ஆகியோர் கொலையாயினர்.
இப்போது அபர்ணா பலியாகியுள்ளார். இந்த அனைவருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.