75% எம்பி-எல்எக்கள் ராஜினாமா: லாலு
டெல்லி: மகாராஷ்டிரத்தில் பிகாரிகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலைக் கண்டித்து தனது கட்சியைச் சேர்ந்த 75 சதவீத ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி, எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை அதன் தலைவரும் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவிடம் தந்துவிட்டதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இதில் மத்திய அமைச்சர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலத்தவர் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்தி வரும் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால் வரும் 15ம் தேதிக்குள் தனது கட்சியின் மத்திய அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர் என லாலு எச்சரித்துள்ளார்.
இந் நிலையில் லாலுவிடம் 75 சதவீத எம்.பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களைத் தந்துவிட்டதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷியாம் ரஜக் தெரிவித்துள்ளார்.
அதே போல பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது ஐக்கிய ஜனதா தள எம்பி, எம்எல்ஏக்கள், மாநில அமைச்சர்களை பதவி விலகச் சொல்வார் என்று நம்புகிறேன். நிதிஷ் அரசில் பங்கேற்றுள்ள பாஜகவும் தனது பிகார் மாநில எம்பி, எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வைக்கும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார் ரஜக்.