For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிளிநொச்சியை சுற்றி வளைத்துவிட்டோம்!-இலங்கை ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

கிளிநொச்சி: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை சுற்றி வளைத்து கடும் தாக்குதல் நடத்துகிறது இலங்கை ராணுவம். கிளிநொச்சியில் 90 சதவீதம் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

நேற்றைய சண்டையில் விடுதலைப் புலிகளின் கடற்படையைச் சேர்ந்த முக்கிய தளபதி ஒருவர் பலியானார்.

ராணுவத்தின் 'அதிரடிப்படை 10' என்ற பிரிவைச் சேர்ந்த வீரர்கள் கிளிநொச்சியின் மேற்குப் பகுதியில் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இந்தச் சண்டையில் மிக முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாகவும், 80 கி.மீட்டர் நீளமுள்ள வடமேற்கு கடற்பகுதியான கிளிநொச்சியில் 70 கி.மீட்டர் தூரத்தை இலங்கை படையினர் தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்தப் பகுதி முழுவதையும் சீல் வைத்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

திங்கள்கிழமை மாலையில் இலங்கை விமானப் படையின் ஜெட் போர் விமானங்கள், விடுதலைப் புலிகளின் முக்கியமான 2 முகாம்கள் அமைந்துள்ள வெத்தலைகேர்னி மற்றும் கடைக்காடு என்ற இடங்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த 2 முகாம்களும் விடுதலைப்புலிகளின் கடற்படை முகாம்கள் என்றும், குண்டு வீச்சில் அவை முற்றிலும் சேதமடைந்த்தாகவும், இப்போது அந்த முகாம்கள் தீப்பற்றி எரிவதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.

கர்னல் இலகோன் பலி?:

ராணுவத்தின் தரைப்படையினர் கிளிநொச்சி நகரம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கட்கிழமை பகலிலும் சரமாரியாக பீரங்கித் தாக்குதல் நடத்தினர். பீரங்கி குண்டுகள் தொண்டைமான் நகர், புது முறிப்பு, செல்வா நகர் உள்ளிட்ட பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்து பலத்த சேதம் உண்டாக்கியதாகவும், இந்தக் கடும் தாக்குதலில் 16 வீடுகள், 18 வணிக வளாகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், மக்கள் அலறியடித்து ஓடியதாகவும் கிளிநொச்சி நகரமே அதிர்ந்ததாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவலடி பகுதியில் நடந்த கடும் சண்டையில், விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி லெப்டினண்ட் கர்னல் இலகோன் பலியானதாக விடுதலைப் புலிகளின் ரேடியோ செய்தி அறிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

போர் முடிவுக்கு வருகிறது:

இதற்கிடையே விடுதலைப் புலிகளுடனான தங்களது போர் முடிவுக்கு வந்து கொண்டுள்ளதாக ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகா அறிவித்து உள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 80 சதவீதப் பகுதி எங்கள் வசம் வந்து விட்டதைத் தொடர்ந்து, 80 சதவீதத்துக்கும் மேலான போர் முடிந்து விட்டது. கடந்த 2ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரம் விடுதலைப் புலிகளை கொன்று விட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார். இந்த சண்டைக்கு விரைவில் முடிவு வந்து விடும் என்று உறுதியாக சொல்வேன். என் பதவிக் காலத்துக்குள் விடுதலைப் புலிகளை தோற்கடித்து விடுவேன். இப்போது பிடித்துள்ள இடங்கள் மூலம் விரைவில் யாழ்ப்பாணத்துக்கு தரை வழிப் போக்குவரத்து திறக்கப்படும் என்றும் நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X