விண்ணைத் தொடும் காய்கறி விலை!
சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் காய்கறி விலை எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. அனைத்துக் காய்கறிகளின் விலையும் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலங்களிலும் தமிழகத்திலும் சமீபத்தில் பெய்த கடும் மழையால் காய்கறி தோட்டஙகள் பாதிப்புக்குள்ளானதால் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் அதிகரித்து விட்டது. கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20க்கும், விதை இல்லாத வெள்ளை கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.30க்கும் விற்பனை ஆகிறது.
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் அவரைக் காய் ஒரு கிலோ ரூ.45க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.15க்கும், கேரட் ஒரு கிலோ 30க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.25க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.25க்கும்,
பாகற்காய் ஒரு கிலோ ரூ.20க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ.15க்கும், மிளகாய் ஒரு கிலோ ரூ.15க்கும் விற்பனை ஆகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியை சுற்றி உள்ள கடைகளில் காய்கறிகளை இடத்திற்கு தகுந்தாற்போல விற்பனை செய்து வருகிறார்கள். சில்லரை காய்கறி கடைகளில் பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.25க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி ரூ.45:
கடந்த 2 நாட்களாக சற்று விலை குறைவதுபோல் காணப்பட்ட தக்காளி விலை நேற்று கிலோவுக்கு ரூ.5 கூடிவிட்டது.
பெங்களூர் தக்காளி ஒரு கிலோ ரூ.45க்கும், நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.50க்கும் விற்கப்படுகிறது.
சென்னை நகர மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஒரு நாளைக்கு 700 முதல் 1000 லாரிகள் காய்கறி தேவைப்படுகிறது. ஆனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக 250 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வருகின்றன.
மழையின் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காய்கறி தோட்டங்ககள் அழிந்து சேதம் அடைந்துவிட்டன. எனவே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மிகக் குறைந்த அளவில் காய்கறிகள் வருகிறது.
இதுதான் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்றும், அடுத்த மாதம் (டிசம்பர்) வரை காய்கறி விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும் காய்கறி மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.