8000 விமான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்
புதிய விமான நிலைய நிர்வாகக் கொள்கையின்படி இந்தியன் ஏர்லைன்ஸ் சம்மேளனத்தில் இடம்பெற்றுள்ள விமான நிறுவனங்களின் மொத்த விமான நிலையப் பணியாளர்கள் 28,000 பேரில் உடனடியாக 8,000 பேரை பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
விமான நிலைய நிர்வாகத்தின் புதிய கொள்கையின்படி இனி தனியார் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையப் பணிகளில் அனுமதிக்கப் படமாட்டார்கள்.
ஏர் இந்தியா மற்றும் விமான நிலைய நிர்வாகத்தினர் மட்டுமே பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் மூலம்தான் தனியார் விமான ஆபரேட்டர்கள் இனி தங்கள் சேவைகளை கையாள வேண்டி வரும்.
தற்போது இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு விமான நிலையங்களில் ஜெட் ஏர்வேஸ் சார்பில் 4,000 பேரும், ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோவில் முறையே 1,800 பேரும் மற்றும் 2000 பணியாளர்களும் உள்ளனர். கோ ஏரில் 350 பேர் உள்ளனர்.
புதிய விமான நிலையக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் இவர்கள் அனைவரும் வேலை இழப்பார்கள்.
ஆனால் இதற்கு தனியார் விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனாலும் வேறு வழியின்றி, திட்டமிட்டபடி 8000 பணியாளர்களை படிப்படியாக வேலை நீக்கம் செய்யும் முடிவில் உறுதியாக இருப்பதாக இந்திய ஏர்லைன்ஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பணியாளர் குறைப்பு அமலுக்கு வரும் என்கிறார்கள்.
ஆனாலும் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் விமானப் போக்குவரத்துத் துறை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.