எச்1 பி விசா-ஒபாமாவுக்கு நாஸ்காம் கோரிக்கை!
டெல்லி: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமாவுக்கு, இந்திய சாப்ட்வேர் சேவை நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
சாப்ட்வேர் மற்றும் பி.பி.ஓ. நிறுவனங்களுக்கு 60 சதவீதம் வருவாய் அமெரிக்காவிலிருந்துதான் கிடைக்கிறது. அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமா, இந்தியாவில் செய்யப்படும் அவுட்சோர்சிங் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அமெரிக்காவிலே ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி தவிக்க, இந்தியாவிக்கும் இதர ஆசிய நாடுகளுக்கும் அவுட்சோர்ஸிங் தர வேண்டிய அவசியமென்ன என்று கேட்டிருந்தார்.
தற்போது, ஒபாமா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவுட்சோர்சிங் பணியில் பாதிப்பு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நாஸ்காம் அமைப்பு, ஒபாமாவின் வெற்றியை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து நாஸ்காம் விடுத்துள்ள அறிக்கை:
ஒபாமா ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உறவு மேம்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலக பொருளாதாரம் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும், தொழில் ரீதியான கைதேர்ந்த தொழிலாளர்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இதற்கு ஏற்ற வகையில் எச்.1 பி விசா வழங்குவதை ஒபாமா அரசு அதிகரிக்கும் என நம்புகிறோம். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்திய ஐ.டி. வல்லுநர்கள் முக்கிய காரணிகளாக உள்ளனர். எனவே எச்1 பி விசா திட்டங்களை விரிவுப்படுத்த வேண்டும்.
அமெரிக்க அரசு, அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட தயாராக உள்ளோம், என நாஸ்காம் கூறியுள்ளது.
நீங்க சொல்லிட்டீங்க.. அவரு என்ன சொல்லப் போறாரோ...!