ஆங்கிலத்தில் பஸ் டிக்கெட் - சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: அரசுப் பேருந்துகளில் ஆங்கிலத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதைக் கண்டித்து சென்னையில், அதிமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. முதல்வர் கருணாநிதி மொழியை வளர்ப்பதற்குப் பதில் மகள் கனிமொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆங்கிலத்தில் பஸ் டிக்கெட்டுகள் வழங்குவதைக் கண்டித்து மாநில அதிமுக இளைஞர் அணி சார்பில் சென்னை ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன் தலைமை தாங்கினார். மூன்று மாவட்ட அதிமுக செயலாளர்கள், இலக்கிய அணி செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.