ராமதாஸ்-டி.ஆர்.பாலு சந்திப்பு: திமுக-பாமக சமரசத்துக்கு முயற்சி
இரு கட்சிகளும் மன வருத்தங்களை மறந்துவிட்டு மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், முதல்வரை தனியே சந்தித்துப் பேசுமாறும் ராமதாசிடம் பாலு கோரிக்கை வைத்தார்.
திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் பண்ணை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
முதல்வருக்குத் தெரிந்தே தான் இங்கு வந்ததாகவும், இப்போது நாடும், தமிழர்களும் சந்தித்து வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள மீண்டும் முதல்வரும் ராமதாசும் கைகோர்ப்பது அவசியம் என்றும் பாலு கூறினார்.
கடந்த ஜூன் 17ம் தேதி கூட்டணியை விட்டு பாமகவை திமுக வெளியேற்றியது. அதற்கு முன்பே இரண்டாண்டு காலமாக இரு கட்சிகளும் பல விஷயங்களில் வெளிப்படையாகவே மோதி வந்தன. அறி்க்கைப் போர்களும் நடந்தி வந்தன, இந்த மோதல்கள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன.
ஜூன் மாதத்துக்குப் பின் முதல்வர் கருணாநிதியை ராமதாஸ் சந்திக்கவில்லை. இலங்கைத் தமிழர்களுக்காக கடந்த மாதம் 24ம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியபோது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கும்பிடு போட்டதோடு சரி.
இந் நிலையில் தான் ராமதாசை பாலு சந்தித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்பின்போது, இது குறித்து முடிவு செய்ய தனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகளுடனும் டெல்லியில் சில நண்பர்களுடனும் பேசிவிட்டு சொல்வதாக ராமதாஸ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே திட்டக்குழுவின் துணைத் தலைவரும் முதல்வரின் நண்பருமான நாகநாதனும் ராமதாசுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது, முரசொலியில் சமீபத்தில் பாமகவைத் தாக்கி வெளியான கடுமையான கட்டுரையைக் கண்டு முதல்வர் அதி்ருப்தி அடைந்ததாகவும், அதை வெளி்யிட்ட இரு பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் ராமதாசிடம் கூறியதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் பாமகை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர திமுக முயல்வது தெரிகிறது.
சட்டமன்றம் கூட உள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க் கொடி உயர்த்தி ஆட்சிக்கு தொல்லை தரலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவும்போது இந்தச் சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.