உத்தப்புரத்திற்குள் நுழைய அரசியல்வாதிகளுக்குத் தடை
மதுரை: சர்ச்சைக்குரிய உத்தப்புரம் கிராமத்திற்குள் அரசியல்வாதிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் சமுதாயத்தினருக்கும், பிள்ளைமார் சமூகத்தினருக்கும் இடையே பூசல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து மோதல்கள் வெடித்தவண்ணம் உள்ளது.
உத்தப்புரம் அருகே உள்ள இ. கோட்டைப்பட்டியில் சமீபத்தில் பெரும் மோதல் வெடித்து துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் உத்தப்புரம், கோட்டைப்பட்டி, எழுமலை ஆகிய கிராமங்களுக்குள் அரசியல் கட்சித் தலைவர்களோ, அரசியல்வாதிகளோ நுழையக் கூடாது என போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், இந்த கிராமங்களில் இன்னும் ஒரு வாரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும். அதன் பின்னர் ஒரு வாரத்திற்கு நிலைமை கண்காணிக்கப்படும்.
இந்தக் கிராமங்களுக்குள் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யாரேனும் செல்ல விரும்பினால், போலீஸாரிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும். அந்தக் கோரிக்கையை நிராகரிக்கவோ, அனுமதிக்கவோ போலீஸாருக்கு முழு உரிமை உண்டு.
அரசு பேருந்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை அரசுப் பேருந்துகள் உள்பட 21 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து பல்வேறு வழிகளை யோசித்து வருகிறோம். இருப்பினும் சிலைகளுக்கு இரும்புக் கூண்டுகளை அமைப்பதற்கு மக்கள் எதி்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசிக்கப்படும் என்றார்.
இதற்கிடையே, தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தைச் சேர்ந்த குழு ஒன்று உத்தப்புரத்திற்கு இன்று வருகை தருகிறது. அவர்களுடன் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களும் வருகின்றனர்.
இக்குழுவினர் உத்தப்புரம், கோட்டைப்பட்டி, எழுமலை ஆகிய கிராமங்களுக்கு இன்று சென்று விசாரணை மற்றும் ஆய்வு செய்யவுள்ளனர்.