வன்னியில் 1.5 லட்சம் தமிழர்கள் தவிப்பு: சி்ங்கள எம்.பி தகவல்
சிங்கள எம்.பியான பேராசிரியர் ஜெயலத் ஜெயவர்த்தனா டெல்லி வந்துள்ளார். அங்கு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இலங்கைப் போரினால் தமிழர்கள் படும் அவதியை புட்டுப் புட்டு வைத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜெயலத் ஜெயவர்த்தனேவின் அறிக்கை ...
வவுனியாவுக்குச் செல்லும் பிரதான பாதை (ஏ-9) முற்றிலும் மூடப்பட்டுள்ளது. இதனால் வவுனியாவில் உள்ள தமிழர்கள் அகதிகளாகியுள்ளனர். தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
முதியோர், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் நிலை மிக மிக பரிதாபமாக உள்ளது.
அங்கு பல வெளிவராத அதிர்ச்சியான உண்மை நிலவரங்கள் யாரையம் அதிர வைப்பதாக உள்ளது.
வன்னியில் ஒன்றரை லட்சம் பேர் அதிகளாக்கப்பட்டுள்ளதாக அங்கு சென்று ஆய்வு நடத்தி வந்த மன்னார் பாதிரியார் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவத்தின் ஆர்ட்டில்லரி தாக்குதல்கள், வான் தாக்குதல்கள், ராணுவத் தாக்குதல்களால் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மலேரியா உள்ளிட்ட நோய்களாலும், தொற்று நோய்களாலும் பீடிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இவர்கள் வசித்துக் கொண்டுள்ளனர்.
குழந்தைகள் அனைவருமே நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, பருப்பு, சீனி என எந்த வகையான உணவுப் பொருளும் சரிவர கிடைப்பதில்லை.
விவசாயம், மீன் பிடி என எந்தத் தொழிலும் இப்பகுதிகளில் நடைபெறவில்லை. கிட்டத்தட்ட அடிமைகள் போன்ற நிலையில் இங்குள்ள தமிழர்கள் தத்தளித்து வருகின்றனர்.
இப்பகுகுதிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அரசு மிக மிக குறைந்த அளவிலேயே விநியோகித்து வருகிறது.
இப்பகுதியை விரைவி் புணரமைக்க வேண்டும். இங்குள்ளவர்களுக்கு விரைவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் நிலை மிகவம் மோசமாகி விடும்.
அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக சேவையாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், மத குருக்கள் என யாருமே இங்கு சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜெயவர்த்தனே.
ஜெயவர்த்தனேவின் இந்த அறிக்கை, இலங்கையில் தமிழர்கள் பட்டு வரும் பெரும் துயரத்தை விளக்கும் ஒரு சிறந்த ஆதாரமாக வெளிப்பட்டுள்ளது.
வவுனியா நிலையை மட்டும் இவர் தெரிவித்துள்ளார். போர் நடந்து வரும் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இதை விட மோசமான நிலையே நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை.