பிரதமர் இன்று ஓமன்-கத்தார் பயணம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் பயணமாக இன்று ஓமன், கத்தார் நாடுகளுக்குச் செல்கிறார்.
இரு தரப்பு உறவுகள், பெட்ரோலிய சப்ளை, எரிசக்தி பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அந் நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
முதலில் ஓமன் செல்லும் பிரதமர் நாளை கத்தார் செல்கிறார். கத்தாருக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் வெளிநாட்டு இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, வெளியுறவுத்துறை இணையமைச்சர் அஹமத் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவும் செல்கிறது.
ஓமனில் 5,50,000 இந்தியர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுக்கு கடைசியாக 1998ம் ஆண்டில் வாஜ்பாய் தான் பிரதமராக தனது பயணத்தை மேற்கொண்டார். இதையடுத்து இந்தியப் பிரதமர் செல்வது இதுவே முதல் முறையாகும்.
அமெரி்க்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அனைத்து நாடுகளுமே பண பலம் மிக்க வளைகுடா நாடுகள் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளன. வளைகுடா நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க பெரும் போட்டி நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்தியப் பிரதமரி்ன் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.