எச்சரிக்கையின்றி சுட்டது போலீஸ்-மக்கள் புகார்
மதுரை: முன்னெச்சரிக்கை எதுவும் தராமல் சரமாரியாக சுட்டது போலீஸ் என்று துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவரைப் பலி கொடுத்த இ.கோட்டைப்பட்டி கிராம மக்கள், தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷன் குழுவிடம் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமம் ஜாதிப் பிரச்சினையில் தகித்து வருகிறது. இந்த நிலையில் இக்கிராமத்திற்கு அருகில் உள்ள இ.கோட்டைப்பட்டி கிராமத்தில், செவ்வாய்க்கிழமை கலவரம் மூண்டது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சுரேஷன் என்ற 23 வயது இளைஞர் பலியானார்.
இதுதொடர்பாக வெளியான பத்திரிககைச் செய்திகளின் அடிப்படையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
ஆணையத்தின் உதவி இயக்குநர் நாராயண மூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று கோட்டைப்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதலில் சுரேஷின் பெற்றோரை நாராயண மூர்த்தி தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். அப்போது சுரேஷின் தந்தை கருப்பையா கூறுகையில், சம்பவ தினத்தன்று நான் எனது கால்நடைகளுக்கு தீவணம் சேகரித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எனது மகன் சுடப்பட்டு விட்டதாக தகவல் வந்தது. ஓடிப் போய் பார்த்தேன். அப்போது எனது மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
அவனை தூக்கிக் கொண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஓடினோம். ஆனால் வழியிலேயே அவன் இறந்து விட்டான் என்றார்.
கரு்பையாவின் சகோதரர் சுந்தரம் கூறுகையில், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதலால் கிராம மக்கள் கோபத்துடன் இருந்தனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. வெளியிட்ட அறிக்கையும் அவர்களது கோபத்தை தூண்டியது.
எழுமலை - உசிலம்பட்டி சாலையில் அவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தின்போது ஆண்களை பின்னுக்கு விட்டு விட்டு பெண்கள் முன்னுக்கு நின்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸார், பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். ஜாதிப் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசினர். இதையடுத்து ஆண்கள் கோபமடைந்து முன்னால் வந்தனர். இதைத் தொடர்ந்து எந்தவித எச்சரிக்கையும் கொடுக்காமல் போலீஸார் துப்பாக்கிகளால் சுட்டனர்.
போலீஸார் எச்சரிக்கை செய்திருந்தால் அனைவரும் பேசாமல் கலைந்திருப்பார்கள். ஆனால் எந்த எச்சரிக்கையும் செய்யாமல் சுட்டதால்தான் சுரேஷ் சிக்கி உயிரிழந்தார் என்றார்.
நாராயணமூர்த்தி சந்தித்த தலித் மக்கள் அனைவருமே போலீஸ் பக்கம்தான் தவறு இருப்பதாக குற்றம் சாட்டினர்.
பின்னர் தாழ்த்தப்பட்டோர் ஆணைய குழுவினர் பேரையூர் தாசில்தார் பன்னீர் செல்வம், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அப்பாவு உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து விசாரணை நடத்தியது.